ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கலாசார முன்னேற்றம் ஆகிய முக்கிய நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த விஜயங்கள் அமையவுள்ளன.
முதற்கட்டமாக மே 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, பின்வரும் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்:
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராயவுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பை மையமாகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம எகட்ட” (முழு நாடும் ஒன்றாக) தேசிய வேலைத்திட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மே 22ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார். நிந்தவூர் கலாசார நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார்.
அம்பாறை நகரில் புதிதாக அமைக்கப்படவுள்ள வர்த்தகத் தொகுதிக்கான கட்டுமானப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். விஜயத்தின் நிறைவாக, அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பிராந்திய அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த இரு மாவட்ட விஜயங்களின் போது கிழக்கு மாகாணத்தின் பிராந்திய அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்சார்ந்த முக்கிய திட்டங்கள் பலவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )