95 ரக ஒக்டேன் பெட்ரோல், சுப்பர் டீசல் விநியோகம் ஸ்தம்பிதம்!
நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகிய எரிபொருள்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் கையிருப்பை நிலையங்களில் பராமரிப்பதற்கு 3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
இருப்பினும், இந்த எரிபொருள்களை விற்பனை செய்வதன் மூலம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கிடைக்கும் இயக்க இலாபம் சுமார் 45,000 ரூபாவாக மட்டுமே காணப்படுகிறது.
இந்த இரண்டு வகை எரிபொருள்களினதும் தினசரி விற்பனை 500 லீற்றருக்கும் குறைவாக இருப்பதால், ஒருமுறை கொள்வனவு செய்யும் கையிருப்பை விற்று முடிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாகிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கும் 45,000 ரூபா லாபத் தொகையானது, எரிபொருள் நிலைய ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுப்பதற்குக்கூடப் போதுமானதாக இல்லை என விநியோகஸ்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த இரண்டு வகை எரிபொருள்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) வழங்கும் சதவீதத்தை விட, இலங்கையிலுள்ள வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமான (அதிகபட்ச சில்லறை விலையில் 3%) தள்ளுபடியை வழங்கி வருகின்றன.
இதன் காரணமாக, கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பல கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இந்த எரிபொருள்களைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து வருகின்றன.
இதனால் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நவீன ரக வாகனங்களைப் பயன்படுத்தும் நுகர்வோர் தங்களுக்குரிய எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )