நந்திக்கடலில் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்திய ரவிகரன்!
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (18), முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நந்திக்கடல் கரையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின்போது, கடலன்னைக்கு மலர்தூவி, சுடரேற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்: "எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, முள்ளிவாய்க்காலில் பேரழிவிற்குள்ளாகி உயிர்நீத்த எங்கள் சொந்தங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
" நந்திக்கடல் நினைவேந்தலைத் தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டிய சிறப்புப் பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த உருக்கமான அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )