தமிழக தேர்தல் களம்: புதிய 'பெஞ்ச்மார்க்' 82.72 சதவீதத்தை எட்டுமா வாக்குப்பதிவு?
சென்னை: தமிழகத்தில் கடந்த 2021ல் 73.63% என்கிற அளவுக்கு வாக்குப்பதிவு இருந்தது. இந்நிலையில், இந்த முறை 82.72%ஐ வாக்குப்பதிவு தாண்டினால்தான், தமிழகத்தில் கடந்த முறையை விட அதிக வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்று அர்த்தம்.
அதெப்படி 73.63%ஐ தாண்டினாலே கூடுதலாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்றுதானே அர்த்தம்! என சந்தேகம் எழலாம். 82.72% என பெஞ்ச்மார்க் வைத்திருப்பதற்கு காரணம், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகள்தான். வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும், சதவிகிதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.
உதாரணமாக ஒரு தொகுதியில் 1,000 வாக்காளர்கள் இருக்கிறார்கள் எனில், அவர்களில் 600 பேர் வாக்களித்தால், வாக்குப்பதிவு சதகிவிதம் 60% ஆகும். ஆனால், இந்த தொகுதியில் உள்ள வாக்களர்களில் 100 பேர் நீக்கப்பட்டுவிட்டார்கள், பின்னர் மீதமுள்ள 900 பேரில், 600 பேர் வாக்களிக்கிறார்கள் எனில், வாக்கு சதவிகிதம் 66.6% ஆக உயரும்.
காரணம் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு. இந்த கணக்கை அப்படியே தமிழ்நாடு முழுவதற்கும் பொருத்தி பார்ப்போம். அதாவது, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,37,07,380 (6.37 கோடி). பதிவான வாக்குகள், 4,69,07,743 (4.69 கோடி). அப்படியெனில் வாக்கு சதவிகிதம் 73.634% ஆகும். தற்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 (5.67 கோடி) என குறைந்திருக்கிறது.
இதில் கடந்த முறையை போல 73.63% வாக்குகள் பதிவாகியிருக்கிறது எனில், உண்மையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4,17,53,644 (4.17) என குறைந்திருக்கிறது என்று அர்த்தம்.
கடந்த முறை பதிவான வாக்குகளே, இந்த முறையும் பதிவானால் தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 82.72% என உயர்ந்து இருக்கும். வெறும் சதவிகிதம் மட்டும் அதிகரித்திருக்கும், ஆனால் எண்ணிக்கை அதே அளவில்தான் இருக்கும்.
அப்படியெனில், தமிழகத்தில் குறைந்தது 4,69,07,744 பேர் (2021 தேர்தலில் வாக்களித்தவர்களை விட ஒருவர் கூடுதலாக) வாக்களிக்க வேண்டும்.
அப்படி அளித்தால்தான் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம்.
இந்த சதவிகிதம் எப்போது 82.72%-ஐ தாண்டுகிறதோ அப்போதான் வாக்குப்பதிவு அதிகரித்திருக்கிறது என்று புரிந்துக்கொள்ளலாம்
(வீடியோ இங்கே )