தமிழ் - சிங்கள புத்தாண்டு 2026 (வீடியோ இணைப்பு)
சிங்களப் புத்தாண்டு என்பது இலங்கை சிங்களவர்களால் பழங்காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வரும் புத்தாண்டு ஆகும். இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை இலங்கையின் பழங்காலத் தமிழர்களின் வழியாக இலங்கையில் தோற்றம் பெற்ற தமிழர் புத்தாண்டு முறை என்பதனால் இதனை இலங்கையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர்.
தமிழர் காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைய 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் கணக்கிடப்படும். சித்திரை முதலாம் திகதி ஆண்டு தொடக்கம் நிகழும்.தமிழரின் புத்தாண்டான அன்றைய நாளையே சிங்களவரும் தங்கள் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
சிங்கள மொழியில் அழுத் அவுருது என்றழைக்கப்படுகின்றது. இலைதுளிர் காலத்தின் அரும்பில் இந்த புத்தாண்டு தொடங்குகின்றது. காலையில் எழுந்து நீராடி, புதிய வெள்ளை ஆடை அணிந்து, பௌத்த விகாரைகளுக்கு சிங்களவர் சென்று வழிபடுவர். கிரிபத், (வெண் பொங்கல்) மற்றும் பிற பலகாரங்கள் செய்து, உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு களிப்பர். பெரியோரை மதித்து கை விசேடம் பெறுவர். சிறுவர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்வர்.
தமிழ்நாட்டில் இந்த நாளை பல விதமாக கொண்டாடுவார்கள். வீடுகளை நன்கு சுத்தம் செய்வார்கள். கோலம் போடுவார்கள். மா இலை தோரணம் கட்டுவார்கள். வீட்டு வாசலில் மஞ்சள், குங்குமம், அரிசி மாவு ஆகியவற்றால் அழகான வரவேற்பு வாசல் அமைப்பார்கள். புதிய உடைகளை அணிந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு புதிய உடைகள் வாங்கித் தருவார்கள்.
முதியவர்களை வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். நெல் அரிசி, பழங்கள், வெல்லம், தேன் ஆகியவற்றை சேர்த்து நைவேத்தியம் செய்வார்கள். விசிறி, கண்ணாடி, பூக்கள், பழங்கள், நகைகள் ஆகியவற்றை கட்டி "கனி" எனப்படும் அலங்காரத்தை செய்வார்கள். இந்த கனியை முதலில் கடவுளுக்கு சமர்பிப்பார்கள். பின்னர் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் பார்ப்பார்கள். இந்த நாளில் பாரம்பரிய உணவுகளான மாங்காய் பச்சடி, நீர் மோர், புளிப்பு, இனிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு ஆகிய அறுசுவைகள் கலந்த வியஞ்சனங்களை தயாரிப்பார்கள். இந்த அறுசுவை வியஞ்சனங்கள் வாழ்க்கையில் வரும் ஏற்ற இறக்கங்களை அங்கீகரிப்பதைக் குறிக்கும். தமிழ் இலக்கியங்களை படிப்பார்கள். புதிய புத்தகங்களை வாங்குவார்கள். கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். தானம் செய்வார்கள். ஏழைகளுக்கு உணவு வழங்குவார்கள். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள்.
இந்த நாளில் எதை முதலில் பார்க்கிறோமோ அது அந்த ஆண்டு முழுவதும் நமக்கு நன்மை தருமென்று நம்புவார்கள். அதனால் காலை எழுந்ததும் தாய், தந்தையரை வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். பின்னர் இறைவனை வழிபடுவார்கள். நல்ல விஷயங்களை முதலில் பார்க்க முயல்வார்கள். இந்த நாளில் புதிய முயற்சிகளை தொடங்குவார்கள். புதிய வியாபாரம், புதிய வேலை, புதிய வீடு ஆகிய புதிய காரியங்களுக்கு இந்த நாள் சிறந்ததாக கருதப்படுகிறது.