உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; வலுக்கும் போராட்டங்கள்!

#SriLanka #Protest #Body #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
5 months ago
உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவ கிடங்கில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி உயிர்மாய்த்துக்கொண்ட நிலையில், அவருடைய உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பினவரையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில், வைத்தியசாலையில் பணிபுரியும் மூன்று பணியாளர்களால் குறித்த பெண்ணின் உடல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தனர். 

இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சம்பவம் தொடர்பாக தவறிழைத்தவர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எந்தவிதமான சட்டரீதியான அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனை எதிர்த்து கடந்த மாதம் 3 ஆம் திகதி கிளங்கன் வைத்தியசாலை வளாகத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

அப்போது போராட்டக்காரர்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் இருபாலரும் இச் சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை வேண்டும் என்றும், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும், இவ்வாறான செயலில் ஈடுபட்ட மூன்று பேரும் பணியில் இருந்து உடனடியாக இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இச் சம்பவம் இனியும் இலங்கையில் எப்பகுதியிலும் நடைபெறாத வண்ணம் இன்றைய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும், என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அதன்படி, ஹட்டன், மஸ்கெலியா, வட்டவளை, வெளிஓயா, பொகவந்தலாவ, டிக்கோயா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரபத்தனை, நுவரெலியா, கந்தபளை, கொத்மலை மற்றும் இரம்பொடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருந்திரளான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும், குற்றத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, “உயிரற்ற உடலுக்குப் கூட பாதுகாப்பில்லை என்றால், பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு?”,“பெண்ணின் உடல் – உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் – மரியாதைக்குரியது!”,“மருத்துவமனை கூட பாதுகாப்பான இடமாக இல்லையா?”, “பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாவிட்டால், ஆட்சி எதற்காக?” எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரைவான மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4