மன்னார் ஆழ்கடலில் காற்றாலை அமைக்க புதிய திட்டம்!
மன்னார் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தற்போது ஆழ்கடலில் புதிய காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்கான முதற்கட்ட நகர்வுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
உலக வங்கியின் நிதி உதவியுடனும், பிரித்தானிய தூதரகத்தின் பங்களிப்புடனும் மன்னார் ஆழ்கடல் பகுதியில் இந்த காற்றாலைத் திட்டம் அமையவுள்ளது.
இது தொடர்பான சாத்தியவள ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரித்தானிய வர்த்தக பிரதிநிதி தெரேசா ஓமஹோனி மற்றும் சர்வதேச பொறியியலாளர்கள் கலந்துகொண்டு திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்கு விளக்கமளித்தனர்.
ஏற்கனவே மன்னார் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட காற்றாலைகளால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசாங்கம் மீண்டும் ஒரு காற்றாலைத் திட்டத்தை, அதுவும் கடல் பகுதியில் அமைக்க முற்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான குரலாக விளங்கும் சமூகப் பிரதிநிதிகளோ அல்லது போராட்டக் குழுக்களோ பொது அமைப்புக்களோ இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.
இது திட்டமிட்டு மக்களைத் தவிர்த்துவிட்டு, அதிகாரிகளை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஒருதலைப்பட்சமான முடிவாகவே பார்க்கப்படவேண்டியதுடன் முன்னதாகவே இது தொடர்பில் கூட்டங்கள் மக்கள் அழைக்கப்படாது இடம்பெற்றுள்ளது.
அதே நேரம் காற்றாலை திட்டங்களுக்கு மன்னார் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் உள்ள எதிர்பு தொடர்பிலும் அரச அதிகாரிகளால் உரிய தரப்பினருக்கு குறித்த கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்