இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்த வடக்கு மாகாண ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உள்ளூர் உற்பத்திகளை ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, ஏற்கனவே அங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள இத்தகைய போலி உற்பத்திகள் எமது மாகாணத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாக அமையும் என ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியூமன் ஆகியோர், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இச்சந்திப்பு யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றதுடன், இதில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து இரு நாட்டுத் தூதுவர்களும் ஆளுநருடன் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தென்னிலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாவிகளை எவ்வாறு வடக்கு நோக்கி ஈர்ப்பது என்பது தொடர்பில் தூதுவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் விரிவான விளக்கமளித்தார்.
வடக்கு மற்றும் தெற்குக்கு இடையிலான பயண நேரம் அதிகமாகக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய தூதுவர்கள், பயண நேரத்தைக் குறைப்பதன் மூலமே சுற்றுலாவிகளை வடக்குக்கு அதிகளவில் ஈர்க்க முடியும் எனக் குறிப்பிட்டதோடு, அதற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஏதும் உள்ளனவா எனவும் வினவினர்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், போக்குவரத்து உட்கட்டமைப்பு மேம்பாடுகள், உள்ளூர் விமான சேவைகள் மற்றும் மாகாணத்தின் எதிர்காலச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
மேலும், வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறது என்பது குறித்தும், மாகாண சபைத் தேர்தல்கள் குறித்தும் தூதுவர்கள் கேட்டறிந்தனர்.
புலம்பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதற்கான வழிமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளனவா எனத் தூதுவர்கள் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த ஆளுநர், 'தற்போதைய அரசாங்கம் முதலீடுகளைப் பெரிதும் ஊக்குவிக்கின்றது.
அதற்கான சகல வழிகளும் திறக்கப்பட்டுள்ளன. எனவே, புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வித தயக்கமுமின்றி தங்களது முதலீட்டு முயற்சிகளில் ஈடுபட முடியும்' என உறுதிபடத் தெரிவித்தார். அத்துடன், வடக்கின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தூதுவர்களுக்கு எடுத்துரைத்தார்.
வடக்கு மாகாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் முன்னேற்றம் குறித்தும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. இந்த வருடத்துக்கான தங்களது தேசிய திட்டங்களில் வடக்கு மாகாணத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், குறிப்பாக பிரான்ஸ் அரசாங்கம் வடக்கிலுள்ள சிறுவர் மற்றும் பெண்களின் முன்னேற்றம் தொடர்பில் அதீத அக்கறை செலுத்துவதாகவும் தூதுவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசுகளின் அனுசரணையில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் அவர்கள் கேட்டறிந்ததுடன், அத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆளுநர் அவர்களுக்கு விளக்கமளித்தார்.
(வீடியோ இங்கே )