இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள சாதியற்ற கிராமம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள சவுண்டலா கிராமத்தில் கடந்த 5ம் திகதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பாகுபாடு, தீண்டாமை மற்றும் சமூக அநீதியை ஒழிப்பதற்காக "சாதியற்றது" என்று அறிவிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
அரசு சேவைகள், நீர் ஆதாரங்கள், கோவில்கள், தகன மைதானங்கள், பள்ளிகள் மற்றும் சமூக விழாக்கள் உட்பட அனைத்து பொது இடங்களும், வசதிகளும் பாகுபாடு இல்லாமல் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் திறந்திருக்கும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தீண்டாமை, சமூக புறக்கணிப்பு அல்லது சமூக அநீதிக்கு வழிவகுக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் எந்தவொரு கிராமவாசியும் பதிவிடவோ அல்லது விளம்பரப்படுத்தவோ கூடாது என்றும், யாரேனும் இதை மீறினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராமசபை தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் வரதட்சணை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. வரதட்சணை வாங்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும், வரதட்சணை கேட்டு ஒரு பெண் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் கிராம பஞ்சாயத்துக்கு யாராவது தகவல் தெரிவித்தால், அவருக்கு ரூ.2100 வெகுமதி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், கணவர் இறந்த பிறகு பெண்கள் குங்குமத்தை அழிப்பது,தாலியை கழற்றுவது, வளையல்களை உடைப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. தகாத அவதூறு வார்த்தையை பேசுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கிறது.
(வீடியோ இங்கே )