தமிழ் அரசியல் வியாபாரிகளை கிழித்து நூலாக்கிய கம்பவாரிதியின் பதில்

#SriLanka #Jaffna #Pongal #President #AnuraKumaraDissanayake
Prasu
4 months ago
தமிழ் அரசியல் வியாபாரிகளை கிழித்து நூலாக்கிய கம்பவாரிதியின் பதில்

கேள்வி :

தைப்பொங்கல் கொண்டாட யாழ். சென்ற ஜனாதிபதியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, நமது தமிழ்த்தலைவர்கள் போகாமல் விட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

கம்பவாரிதியின் பதில் : 

இதை அவர்களது அறியாமை என்று சொல்வதைவிட வேறு எதனை நான் சொல்ல? கொழும்பில் ஜனாதிபதியுடனும், மற்றைய சிங்களத்தலைவர்களுடனும் கொஞ்சிக்குலாவும் இவர்கள், யாழ்ப்பாணத்திற்கு அவர்கள் வரும்போது மட்டும் “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே!” என்றாற் போல அவர்களை விட்டு விலகி நின்று, தங்களது கற்பினைக் காட்டி, தமிழ்மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள். 

தமிழர்களுக்கு மட்டுமன்றி எல்லா இனத்தார்க்கும் இந்நாட்டில் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்ட ஒரே ஜனாதிபதியாக “அநுர” விளங்குகிறார்.

அதற்காக முதலில் நாம் அவரைப் பாராட்ட வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் முழுப்பிழைகளையும், ஒரே நாளில் தோசை திருப்புவது போல உடனடியாக திருத்திவிடவேண்டும் என நாம் நினைத்தால் அது அறியாமையன்றி வேறல்ல. 

இந்நாட்டில் நெடுங்காலமாய்ப் புரையோடிக் கிடக்கும் குற்றங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சீர் செய்யமுடியும். அதற்கு அவருக்குத் தமிழர்களாகிய நாங்கள் அவகாசம் வழங்கவேண்டும். 

அதை விடுத்து தமிழ்மக்களை ஏமாற்றி, தத்தம் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, நம் தமிழ்த்தலைவர்கள், “கையில காசு வாயில தோசை” என்னுமாப் போல, அவரைத் தேவையில்லாமல் நெருக்கடி பண்ணுவது வேண்டாத வேலையென்றே தோன்றுகிறது. நம் தலைவர்களுக்கு அரசியலும் தெரியவில்லை. தமிழர் தம் பண்பாடும் தெரியவில்லை. 

நம் மண்ணிற்கு, நமது பண்பாட்டு விழாவைக் கொண்டாட வந்த நாட்டின் தலைவரை, நம் தலைவர்கள் ஒருமித்துச் சென்று வரவேற்றிருக்க வேண்டும். பின்னர் அந்த நிகழ்விலேயே மனந்திறந்து தமது ஏமாற்றங்களையும் பதிவு செய்திருக்க வேண்டும்.

“இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது” எனச் சொல்லப்போய், இனவெறிபிடித்த பேரினத்தாரின் ஒரு பகுதியினராலும், அரசியலைத் தமதாக்க நினைக்கும் எதிர்கட்சியினர் சிலராலும் ஜனாதிபதி பெரும் எதிர்ப்புக்களைச் சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் நாமும் அவருக்கு எதிர்ப்புக்காட்டி நின்றால், அது முடிவில் எங்கு கொண்டு போய்விடும் என்பதைக்கூட நம் தலைவர்கள் உணர்கிறார்கள் இல்லை.

பழையபடி வெறும் எதிர்ப்பு அரசியல் செய்துகாட்டி, அறிவில்லாமல் மீண்டும் இளையவர்களைப் போராட்டக் களத்திற்கு இவர்கள் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள். 

ஏற்கனவே இப்படி இளையோரைத் தூண்டி விட்டுப் போர்க்களத்திற்கு அனுப்பிய நம் தலைவர்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குச் சென்று ஒளிந்து, தாமும் வாழ்ந்து தம் பிள்ளைகளையும் வாழ வைத்த வரலாற்றை நாம் அறிவோம். இத்தகையவர்களின் தூண்டுதலால்த்தான் பெருந்தொகையான நம் இளையோரை நாம் இழந்து விட்டோம். 

இனியும் அதே பாதையில் செல்ல நினைப்பது அறிவீனம். உள்நாட்டு மக்களிடம் தாங்கள் இனப்பற்றுள்ளவர்கள் எனக் காட்டி வாக்குகள் சம்பாதிக்கவும், வெளிநாட்டில் வசிப்போர்க்குத் தமது போர்க்குணத்தைக் காட்டிப் பணம் சம்பாதிக்கவும் இவர்கள் செய்யும் தந்திரத்தை, என்றுதான் நம்மினத்தார்கள் உணர்வார்கள் என்று தெரியவில்லை.

நன்றி

ரஜீவன் எம்.பி

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4