யாழில் ஜனாதிபதி அனுர தலைமையில் இடம்பெற்ற போதைக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம்

#SriLanka #Jaffna #drugs #President
Prasu
4 months ago
யாழில் ஜனாதிபதி அனுர தலைமையில் இடம்பெற்ற போதைக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம்

போதைக்கு எதிராக "முழு நாடுமே ஒன்றாக" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், யாழ் மாவட்ட நிகழ்ச்சி கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

ஈழ விடுதலை போராட்ட மெளனிப்பின் பின்னரான வடகிழக்கு தமிழர்களின், வாழ்வியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. கல்வி பொருளாதாரம் மற்றும் அரசியல் சமூக கலாசாரம் போன்றவற்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

கூறப்பட்டவை எவையும் தற்போது திருப்திகரமானதாக இல்லை என்பதே நிதர்சனம். குறிப்பாக, தாயகம் விடுதலை சுதந்திரம் என்ற எண்ண கோட்பாடுகளுக்குள் தம்மை வரித்துக்கொண்ட தமிழர்கள், மெது மெதுவாக தம் சுயத்தை இழக்க நேரிட்டுள்ளது. இவை தமிழர்களின் இருப்பில் சாதாரணமான விடயமல்ல.

images/content-image/1768592343.jpg

இந்த கனத்த நாட்களை தடித்த எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. போதையற்றிருந்த மண்ணில் அதற்கு எதிராக போராடும் துயரத்தை இப் பிரபஞ்சம் எவ்வளவு சீக்கிரம் தந்துள்ளது.

போதைப்பொருள் பாவனை என்பது வடக்கு முழுவதும் வயதுவேறுபாடின்றி ஒட்டிஉறவாடத் தொடங்கியுள்ளது. இவை நீளுமாக இருந்தால் சிறிது காலத்தில் சிந்தனை ஆற்றலற்ற சமூகத்தையே நாம் எதிர்கொள்ள நேரிடும். 

அவர்களுக்கென்று எந்த கனவுகளும் எந்த எண்ணங்களும் இன்றி கால்போன போக்கில் போய்க்கொண்டே இருப்பார்கள். நிறுத்தம் இல்லாதவரை பயணங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். கடந்து வந்தவற்றை அப்படியே திரும்பி பார்த்தால் எவையுமே எமது இருப்புக்காக எஞ்சியிருக்காது. 

காட்டுத் தீ ஏற்பட்டு காடுகளெல்லாம் எப்படி எரிந்து நாசமாக போயிருக்குமோ அதற்கு ஒப்பாக தமிழர்களின் இருப்பும் சாம்பல்மேடாகிப்போயிருக்கும். 

images/content-image/1768592372.jpg

இங்குதான் சிந்திக்க தவறுகிறோமா, இல்லை எமக்கென்ன என்ற எண்ணத்தில் இருந்துவிட்டு போகலாமா, எங்கள் வாசலை தட்டாதவரை நாங்கள் தப்பித்துவிட்டோம் என்ற பெருமிதமா. இல்லை, இவற்றை சுத்தமாக மறுக்க வேண்டும். இன்று உங்கள் வீட்டு வாசல்வரை தட்டியுள்ளது. நாளை உங்கள் வீடுதான் என்பதை மறந்துவிடாதீர்கள். 

தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது, அது மெதுவாக எரிந்தாலும் சரி விரைவாக எரிந்தாலும் சரி தன் வேலையே எதிர்பார்த்தபடி முடித்துவிட்டுத்தான் செல்லும். அயல் வீட்டில்தானே தீ பற்றி எரிகிறது எங்களுக்கு வராதவரை தப்பித்துவிட்டோம் என துள்ளிக்குதிக்காதீர்கள். அடுத்தது உங்கள் வீடுதான். 

பாவம் நெருப்புக்குத்தான் கண்ணில்லையே. போதைப்பொருள் பாவனையும் இதே வகைதான். மாற்றான் பிள்ளைக்கு கேடுவந்தால் எனக்கென்ன ஆகிடுமோ என்றால், அடுத்தது உங்கள் பிள்ளைதான் தப்பிக்க வழியேதும் இருக்காது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதே ஊர்கூடி தேர் இழுங்கள். இம் மண்ணில் நாமும் தலைமுறை கடந்தும் தமிழன் என்றுசொல்லி மார்பு தட்டி வாழலாம்.

ஈழத்து எழுத்தாளர்

தன.ரஜீவன் Dr.ThanaRajeevan

(உளநல ஆலோசகர், பாடலாசிரியர்)

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4