முல்லைத்தீவு பொது வைத்தியசாலையை நிர்மாணிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம்!
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஐந்துமாடி மருத்துவ விடுதித் தொகுதியை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை சுகாதார சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.
குறித்த மருத்துவமனையில் சிகிச்சைகளை வழங்கும் 8 விசேட நிபுணத்துவ அலகுகள் காணப்படுவதுடன், மொத்தமாக 195 நோயாளர்களுக்கான கட்டில் வசதிகளுடன் கூடியதாக உள்ளது.
நோயாளர்களுக்கான குறைந்த செலவுடன் உயரிய தரப்பண்பான சுகாதார சிகிச்சைகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக மூன்றாம் நிலை சிகிச்சை நிறுவனமாக இயங்குகின்ற பிரதான மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள படிமுறைகளின் கீழ், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஐந்துமாடி மருத்துவ விடுதித் தொகுதியை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு 600 மில்லியன் இலங்கை ரூபாய்களை நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த நிதியுதவியைப் பயன்படுத்தி இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.