தூக்கில் தொங்கிய பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!
இரவு தூக்கத்திற்கு சென்ற பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சாய்ந்தமருது கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர், சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய பாடசாலை மாணவன் எனவும் 6 மாதங்களாக மன அழுத்தம் தொடர்பில் சிகிச்சை பெற்று வந்திருந்ததாகவும், அத்துடன் 3 மாதங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை என்பதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இன்று காலை உயிரிழந்த மாணவனின் தந்தை தொழுகைக்காக ஆயத்தம் செய்த நிலையில் இவ்வாறு அவரது மகன் தூக்கில் தொங்கி காணப்பட்டதாக தெரியவருகின்றது.
அத்துடன் சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட தடயவியல் பொலிஸார் சென்று விசாரணைகளை ஆரம்பித்த பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் கட்டளைக்கமைய குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு பார்வையிட்ட பின்னர், சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்