மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஓய்வுபெற்ற பிரிகேடியர் எச்.எம்.சரத் விஜேசேன உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த ஓய்வுபெற்ற கேணல் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் உயிரிழந்த பிரிகேடியரும் காயமடைந்த கேணலும் வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக காலி பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பண்டாரகம - கெஸ்பேவ வீதியில் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது, வெல்மில்ல கல்கடை சந்திப் பகுதியில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மத்துகம நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது.
பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் வீதியில் 100 மீற்றருக்கும் அதிகமான தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பில் பேருந்து சாரதியான அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.