பொலிஸாரால் துரத்தி வந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: மூவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக இன்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினை துரத்தி வந்துள்ளனர். அந்த கார் மூத்தநயினார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள தையல் கடை மற்றும் வேறு ஒரு கடையின்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது தையல் கடையில் இருந்து கதைத்துக்கொண்டிருந்த மூவர் படுகாயமடைந்ததுடன், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர். காரை செலுத்தி வந்த சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இரண்டு கடைகளும், மூன்று தையல் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மானிப்பாய் பொலிஸார் துரத்தி வந்தலாலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.