முல்லைத்தீவில் உயிரிழந்த தோழியின் உடலை தூக்கிச் சென்று நீதி கோரிய மாணவிகள்!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த சிறுமியின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற நிலையில் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை ஏந்திச் சென்றுக்கு சிறுமிக்காக நீதிக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இறந்த சிறுமிக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு இதேமாதிரி எதிர்காலத்தில் நடக்கக்கூடாது. போரில் அடிபட்டு இறந்துவிட்ட நிலையில் இப்போது ஒவ்வொரு உயிராக வளர்த்துக்கொண்டிருக்கின்றோம்.
கவனயீனத்தினால் பிள்ளைகள் செத்துக்கொண்டிருப்பார்களானால் இதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.
இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தரவேண்டும், தவறும் பட்சத்தில் சிலாவத்தை மக்கள் யார் என்பதை இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.