அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
டித்வா' (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாகக் கோர வேண்டாம் என்றும், அதன் ஊடாக அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனர்த்த நிலைமையின் காரணமாக பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை இழந்த சில சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விளக்கியுள்ளார்.
அந்த சிறுவர்களின் நலனுக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், சட்டப்பூர்வமாக உரிய அரச நிறுவனங்கள் ஊடாக அல்லது பொலிஸார் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு இன்றி, நல்நோக்கத்துடன் செய்தாலும் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டதாகத் தெரியவந்தால், அது தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் விளக்கமளித்தார்.
"இந்த அனர்த்த நிலைமையின் பின்னர் எமது சிறு பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் எமக்கு பதிவாகியுள்ளன. பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் பாதுகாவலர்களை அவர்கள் இழந்துள்ளனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சில கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக இந்த சிறு பிள்ளைகளின் விபரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக விசேடமாக இலங்கை பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
ஏதேனும் ஒரு பிள்ளையின் அல்லது இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் விபரங்கள் எவருக்கேனும் தேவைப்பட்டால், நீங்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் அல்லது கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக விபரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, சமூக ஊடகங்கள் அல்லது ஏதேனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களைப் பெறுவது ஒரு குற்றமாகும்.
பொதுமக்களில் சிலர் இந்த சிறுவர்களைப் பாதுகாக்க அல்லது அவர்களின் எதிர்கால நலனுக்காக அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கும் முயற்சிகள் சில வேளைகளில் துஷ்பிரயோகமாக அமையலாம்.
சில நேரங்களில் அவை சமூக விரோதமானதாக அல்லது சட்டவிரோதமானதாக இருக்கலாம். எனவே, நீங்கள் நல்நோக்கத்துடன் செயற்படுவதாக இருந்தால், அருகிலுள்ள பிரதேச செயலகம் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக இது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
