யாழில் தனியார் சிற்றூர்தி நடத்துனரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞர் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் சிற்றூர்தி நடத்துனர் ஒருவர் குறித்த சிற்றூர்தியில் பயணித்த இளைஞர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அருகே நேற்று 04.12.2025 மாலை 5.30 மணியளவில் இளைஞர் ஒருவர் குறித்த சிற்றூர்தியில் ஏறி பயணித்துள்ளார்.
குறித்த இளைஞர் 100 ரூபாவைக் கொடுத்து நடத்துனரிடம் பலாலி சந்தி எனக் குறிப்பிட்டு ரிக்கெற் எடுத்துள்ளார்.
நடத்துனர் மீதி 10 ரூபாயை இறங்கும் போது தருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது குறுக்கிட்ட இளைஞர் 70 ரூபாய் ரிக்கெட்டுக்கு எதற்கு 100 ரூபாய் வாங்குகிறாய் என நடத்துனரிடம் கடுமையாக முரண்பட்டுள்ளார்.
அதற்கு நடத்துனர் எங்களுக்கு பயணிகளிடம் கூடுதலாக பணம் அறவிட வேண்டிய அவசியமில்லை, சிற்றூர்தியின் கதவுக் கண்ணாடியில் கட்டண விளக்கம் ஓட்டப்பட்டுள்ளது.
அதனை பார்த்து தெளிவடையுமாறு கூறியுள்ளார். கோண்டாவில் சந்தியில் மீண்டும் குறித்த இளைஞர் முரண்பட்டதனை தொடர்ந்து 100 ரூபாவை இளைஞரிடம் வழங்கிய நடத்துனர், எங்கள் சிற்றூர்தியில் இருந்து இறங்கி பின்னுக்கு வரும் சிற்றூர்தியில் ஏறி வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் நடத்துனரைத் தாக்கிய இளைஞர், சிற்றூர்தியின் படியில் இருந்து நடத்துனரை கீழே தள்ளி விழுத்தியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார் இருதரப்பையும் விசாரித்ததனை தொடர்ந்து குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வழித்தட சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களிலும் எமது சிற்றூர்திகளில் பயணிக்கும் சிலரால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்கள் சிற்றூர்திகளில் சேவையில் ஈடுபடும் சாரதி மற்றும் நடத்துனரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸாரை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
