அநுரகுமாரவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது! சீன தூதுவர் புகழாரம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நான்காம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்துக்கு அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு காரணிகளால் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த திட்டம் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது.
கடவத்தை –மீரிகம நெடுஞ்சாலை திட்டத்தை மீள ஆரம்பித்துள்ளமை திருப்புமுனையாக அமையும்.இந்த திட்டம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும். இத்திட்டம் இலங்கையின் உட்கட்டமைப்புக்கு வலுவானதாக அமையும். அத்துடன் தேசிய ரீதியான சவால்களையும் வெற்றிக்கொள்ளும். இலங்கையுடன் அர்ப்பணிப்புடனும், தொடர் ஒத்துழைப்புடனும் பணியாற்ற தயாராகவுள்ளோம் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



