மனிதப்புதைகுழிக்கு சர்வதேச விசாரணை அவசியம்: ஐ.நாவில் பிரிட்டன் சுவிஸ் வலியுறுத்தல்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும், தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பேரவையின் உறுப்புநாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது.
நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதன்படி தேசிய நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகக் கட்டமைப்புக்களின் இயலுமையையும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த ஜப்பான், வட-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேபோன்று நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்தது.
அதேவேளை நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பாராட்டிய பிரிட்டன், மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியது.
அத்தோடு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்தும், பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அச்சட்டம் நீக்கப்படாமை குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
அதேபோன்று தாம் இலங்கையின் நீண்டகால நட்புறவு நாடாகத் திகழ்வதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது.
அத்தோடு நபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும், நிகழ்நிலைக்காப்புச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியது.
மேலும் நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனவும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தின.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



