வெற்றிலையின் மறைக்கப்பட்ட மகிமைகள்!!!

எங்கள் வீடுகளில் பிள்ளை பெற்ற பெண்களுக்கு ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் வெற்றிலையைக் களிப்பாக்கு மற்றும் சுண்ணாம்புடன் சேர்த்துக் கட்டாயம் மெல்ல வைப்பார்கள் . இதனால் அப்பெண்களுக்குச் செரிமானம் நன்கு ஆவதோடு பிரசவ காலத்தில் ஏற்பட்ட இரத்த இழப்பு ஈடு செய்யப்படுகிறது என்பது கண்கூடாகக் கண்ட உண்மை.
வெற்றிலையில் சிறிது விளக்கெண்ணெய் தடவி.... நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றப்பட்ட அகல் விளக்கில் காட்டினால் அந்த வெற்றிலையில் தீபச் சுடர் பட்டுக் கருமையாகப் படியும். அதை விரலால் வழித்தெடுத்து ஒரு கொட்டாங்கச்சியில் சேகரிப்போம்.
அதைத் தான் பச்சிளங் குழந்தைக்குப் பொட்டு வைக்கவும் கண்களில் மையமாக இடவும் பயன்படுத்துவோம்.
ஏதாவது காணாக்கடி ஏற்பட்டால் (அதாவது இன்ன பூச்சி தான் கடித்தது என்று தெரியாத ஒரு நிலை) மூன்று நான்கு வெற்றிலையுடன் சிறிது கல்லுப்பு மற்றும் நாலைந்து மிளகு சேர்த்து நன்கு மென்று விழுங்கினால் அந்தக் கடி விஷம் விரைவாகப் பரவாது என்பார்கள் எங்கள் கிராமத்தில். அதோடு பூச்சிக் கடியினால் ஏற்பட்ட கடுகடுப்பும் சில நிமிடங்களில் குறையத் தொடங்கும்.



