பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடமையாற்றும் ஹர்ஷ டி சில்வா!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தாம் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் திரு.தேஸ்பந்து தென்னகோனுக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் நேற்றைய (07.06) அமர்வின்போது விசேட அறிக்கையொன்றை விடுத்த ஹர்ஷ டி சில்வா, பல சவால்களுக்கு மத்தியில் தான் நிதிக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
தமக்கு அலுவலகம் இல்லை எனவும் சேவை செய்வதற்கு மூன்று பேர் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா சில சமயங்களில் தமது தனிப்பட்ட பணத்தில் அவர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிலக்கரி விவகாரம், சீனி மோசடி, மத்திய வங்கியின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நிதிக் குழு தொடர்ந்தும் பேசி வருவதாகத் தெரிவித்த எம்.பி., பல பிரச்சினைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் விசா விவகாரம் தொடர்பிலும் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதாகவும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
யாருடைய நலன்களுக்காக இது போன்ற செயல்கள் செய்யப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய அவர், தனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சபாநாயகருக்கும் பொறுப்பு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



