சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது!

( இரண்டாம் இணைப்பு)
சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளது.
சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(முதல் இணைப்பு)
ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான சாந்தனின் பூதவுடல், தற்போது விமானத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக சட்டத்தரணி புகழேந் தெரிவித்தார்.
சுமார் 11.30மணியளவில் இலங்கையை வந்தடையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தில்லையம்பலம் சாந்தான் நேற்று முன்தினம் (28) காலை 7.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது பூதவுடலினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினால் முன்னெடுக்கப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய நடைமுறைகள் பூர்த்தியான நிலையில் இன்று (01) வெள்ளிக்கிழமை சிறீலங்கான் எயார்லைன்ஸ் விமானத்தின் மூலமாக மட்டுமே இறந்தவர்களின் உடலங்களை எடுத்துவரும் நடைமுறை காணப்படுவதனால் அவ்விமான சேவை மூலமாக சென்னையில் இருந்து கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மலர்சாலையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு பூதவுடல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட உள்ளது.
இறுதி கிரியைகள் மக்கள் அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பின்னர் அறியத்தரப்படும் என சாந்தனின் குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சாந்தனின் புகழுடல் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
முன்னதாக அவரது புகழுடலினை தாயகத்திற்கு வழியனுப்பி வைக்கும் வகையில் புகழ் வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாந்தனின் சிறைத் தோழர்களான நளினி, ரவிச்சந்திரன் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் பங்கேற்று மலர் மாலை அணிவித்து மலர்தூவி இறுதி வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைத்திருந்தனர்.



