உலகத் தமிழினம் போற்றும் வீரத் தமிழன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்!

#SriLanka #NorthernProvince #Death #Tamil Nadu #Kilinochchi #Tamil People #Mullaitivu #War #Sri Lankan Army #srilankan politics #Mullivaikkal
Lanka4
3 months ago
உலகத் தமிழினம் போற்றும் வீரத் தமிழன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்!

உலகத் தமிழர் மட்டுமல்லாமல் எமது எதிர்இனம் என கூறப்படும் சிங்கள சகோதரர்களாலும் வீரன், உத்தமன், புத்திசாலி, சமயோகித புத்திசாலி என போற்றப்பட்டவரே விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன். மாமா என்றும் அண்ணா என்றும் தலைவர் என்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அழைக்கப்படும் அன்பும் பண்பும் ஒழுக்க நெறி தவறாத மாபெரும் உன்னத மனிதர் தான் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

 தமிழினத்தின் தவிர்க்கமுடியாத தலைவனாக வளம் வந்த மேதகு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றினை நாம் லங்கா4 ஊடகம் வாயிலாக தருகின்றோம்.

 அறிந்தவர்கள் பிழைகள் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். வாருங்கள்  காலத்தின் தேவை கருதி அவர் வரலாற்றை நாம் பார்ப்போம்.  

 இலங்கையின் வடக்கில் உள்ள யாழ்ப்பாணம் கடற்கரை நகரான வல்வெட்டித்துறையில் 1954ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர்தான் பிரபாகரன். 

 தந்தையார் வேலுப்பிள்ளை இலங்கை அரசாங்க சேவையில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர். பிரபாகரன் அக்டோபர்  1 , 1984 இல் மதிவதனியை திருமணம் செய்து கொண்டார்.

 வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

 மாணவராக இருந்த போதே பிரபாகரன் தமிழ் ஆதரவாளர்கள் குழுவில் இருந்தார். நேதாஜி, பகத்சிங், சேகுவேரா என பல்வேறு தலைவர்களின் கொள்கைகள் மட்டும் போராட்டங்கள் மீது ஈர்க்கப்பட்டவர் பிரபாகரன். 

எனவே, அவர்கள் பாணியில் தமிழ் மக்களுக்கு பூரண சுதந்திரம் மற்றும் உரிமை கேட்டு இலங்கை அரசுக்கு எதிரான போராட்ட இயக்கத்தை கட்டி எழுப்பினார் பிரபாகரன். 1970கள் காலகட்டத்தில் தமிழ் புது புலிகள் என்ற இயக்கத்தை தனது 18 வயதில் தோற்றுவித்தார் பிரபாகரன். 

அதில் சுமார் 10,000 பேருக்கும் அதிகமான போர்க்குணம் மிக்க, எப்போது வேண்டுமானாலும் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கும் வீரர்களை திரட்டி இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். 

 தன் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார். ஒரு முறை குண்டு வெடித்து அவரது காலில் தழும்பை ஏற்படுத்தியது. ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி பொலிசார் அவரது வீட்டுக்கு வந்தனர்.

 அப்போதுதான் தங்களது மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை பெற்றோருக்கு புரிந் தது. கதவு தட்டுவதை வைத்து பொலிசார்தான் தன்னை தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் தப்பிவிட்டார். அதன் பின்னர் பெற்றோர்களிடம் கூறிவிட்டு வீட்டை வெளியேறுகின்றார். 

1970களில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்ட கடுமையான அணுகுமுறையும், கல்வித்துறையில் புறக்கணிப்பு உள்ளிட்டவை தமிழ் இளைஞர் கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது. தமிழ்த்தலைவர் களின் போராட்டங்களுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. 

எனவே, தமிழ் பகுதியில் 1970ல் தமிழ் மாணவர் பேரவை துவங்கப் பட்டது. வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபாகரனும், நண்பர்களும், உறவினர்களுமே அதில் முக்கிய பங்கு வகித்தனர். 

இக்குழு மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கியது. அக்குழுவிலேயே மிக இளையவராக இருந்ததால் அவரை “தம்பி’ என்றே எல்லாரும் அழைத்தனர். சிங்கள எதிர்ப்பை காட்டும் விதமாக பேருந்தை எரிப்பது என்று முடிவு செய்தனர். 

அதன் படி 16 வயதாக இருந்த பிரபாகரன், பேருந்தை எரித்து தனது போராட்டத்தை ஆரம்பித்தார். ஆயுதம் ஏந்துவதன் மூலமே இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் தீர்மானமாக இருந்தார். தமிழ் இன உணர்வை நசுக்கும் நோக்கத்தை கொண்டிருந்த மேயர் ஆல்பிரட் துரையப்பா பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பின்னர் 1975ம் ஆண்டு யாழ்ப்பாணம் மேயர் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபாகரன் அதில் கைதாகவில்லை.

 தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக, புதிய இயக்கமாக பிரபாகரன் நிறுவினார். இலங்கை உளவுப் படையினரை அழித்தல், போலீஸ் நிர்வாகத்தை சீர்குலைத்தல், ராணுவத்தினர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துதல் ஆகிய மூன்று அம்சங்களை புலிகளின் பணிகளாக அப்போது அறிவித்தார்.

 கொரில்லா இயக்கமாக வெளிக் காட்டுவதற்காகவே, இயக்கத்தின் சின்னமாக புலியை தேர்வு செய்தார். புலிகள் இயக்கத்தை உருவாக்கியதால், இலங்கை ராணுவம் அவரை தேடத் தொடங்கியது. 

பொலிசார் மீதும், ராணுவத்தினர் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த, 1978ல், 11 முக்கிய தாக்குதல் சம்பவங்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று பிரபாகரன் அறிக்கை விட்டார். 

இதையடுத்து அந்த ஆண்டே விடுதலைப்புலிகள் தடை சட்டம் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜெயவர்த்தனா அரசு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி, தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளியது. 

ஒருவரை எந்த விசாரணையும் இன்றி 18 மாதம் சிறையில் தள்ளும் சட்டத்தையும் 1979ல் இலங்கை அரசு நிறைவேற்றியது. இதனால், 1979-80ல் ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இயக்கத்தை பலப் படுத்தும் வேலையில் பிரபாகரன் ஈடுபட்டார்.

 1983 உள்ளூராட்சி தேர்தலின் போது, நடத்திய தாக்குதல், ராணுவத்தினரை நிலைகுலைய செய்தது, கண்ணிவெடித்தாக்குதலில் 13 ராணுவத்தினரை கொன்றது ஆகிய சம்பவங்களை பிரபாகரன் நேரில் நடத்தினார். 

இதுபோன்று பிரபாகரனின் தீவிர செயல்கள் தொடங்கின. 1983 ஜூலை 23ல், சிங்களர்களால் 400 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1983 ஜூலை, தமிழ் ஈழப் போரின் கொந்தளிப்பான காலகட்டம் என்று சொல்லலாம். 

ராணுவத்தினர் மீதான கொரில்லா தாக்குதலை பிரபாகரன் தொடங்கினார். கறுப்பு ஜூலை கலவரத்தை கணக்கில் கொண்டு, அப்போது பிரதமர் இந்திராகாந்தி , இலங்கை பிரச்னையில் தலையிடுவது என்று முடிவு செய்தார்.

 இதற்கு அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., முயற்சி செய்தார். புலிகளுக்கு ராணுவ பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது என்று இந்தியா முடிவு செய்தது.

 இந்நேரத்தில், தமிழ் ஈழத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் வெளியிலிருந்தும் பிரபாகரன் பெற்றார். இதனால், ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை புலிகள் நடத்தினர்.

 1984ம் ஆண்டில் இந்திரா படுகொலை செய்யப்பட்டார். அடுத்து பிரதமராகப் பதவியேற்ற ராஜிவுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணக்கமான சூழ்நிலை உருவாகவில்லை. 

இலங்கை அரசுக்குச் சாதகமாக ராஜிவ் செயல்படுவதாக பிரபாகரன் கருதினார். பூட்டான் தலைநகர் திம்புவில் இந்திய அரசின் முயற்சியில் தமிழ்க் குழுக்கள் மாநாடு நடந்தது. 

இங்கு புலிகள் முன்மொழிந்த தமிழர் தன்னாட்சி உரிமை தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்கவில்லை; பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன்பின், திரிகோணமலை அருகே, இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி, 200 பேரைக் கொன்றது.

 இந்தியாவிலிருந்து அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் வெளியேறினார். இதையடுத்து, இந்தியாவுக்கும் – பிரபாகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

1986ம் ஆண்டில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனங் கள் பறிக்கப் பட்டன. அப்போது பிரபாகரன் தமிழகத்தில் தான் இருந்தார். பிரபாகரனின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து அவை திருப்பியளிக்கப் பட்டன.

 1987ம் ஆண்டில் அவர் ஈழம் திரும்பினார். அப்போது பேசிய அவர், “தனி அரசை அமைக்க உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம்’ என்றார். 1987 மற்றும் 1988ம் ஆண்டுகளில், இடைக்கால அரசை தமிழ்ப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று ராஜிவுக்கு எழுதினார் பிரபாகரன். 

இந்த சமயத்தில் பெண்களையும் போராளிகளாக பிரபாகரன் அனுமதித்தார். பெண்புலிகளும் போர்க்களத்தில் ஈடுபட்டனர். தமிழ் ஈழத்துக்காகப் போரிட்டு உயிர் நீத்த மாவீரர் ளை நினைவு கூறும் தினம் 1989ம் ஆண்டில் பிரபாகரனால் துவக்கப்பட்டது. இந்த சமயத்தில் அதிபராகப் பதவியேற்ற பிரேமதாசா புலிகளைச் சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார்.

 இதனால், 1990ம் ஆண்டில் இந்திய அமைதிப்படை நாடு திரும்பியது. அதிபர் பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 1990 ஜனவரி 10ல் மீண்டும் இலங்கை ராணுவம் மற்றும் புலிகளிடம் மோதல் ஏற்பட்டது.

 1991 மே 21ல், ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ், புலிகளின் மனித குண்டுக்கு பலியானார். இதில் பிரபாகரன் குற்றம் சாட்டப் பட்டார். 2006ல் ராஜிவ் படுகொலை பற்றி பிரபாகரன் கூறிய போது, ராஜிவ் கொலையை, “ஒரு துன்பியல் சம்பவம்’ என்றார்.

 பிரேமதாசா, வேட்பாளர் காமினி திசநாயகா மற்றும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் லட்சுமண் கதிர்காமர் ஆகியோர் படுகொலையிலும் பிரபாகரன் குற்றம் சாட்டப்பட்டார். 33 நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தன. இன்டர்போலும் இவரைத் தேடியது. 1993ல் உயிரை துச்சமாக எண்ணி, ரகசியமாக தாக்கும் கரும்புலி தற்கொலை படையினரையும் பிரபாகரன் துவக்கினார்.

கடந்த, 2002ல் நார்வே முயற்சியால் அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரபாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அமைதி முயற்சிகள் வழக்கம் போல் வெற்றி பெறவில்லை. 

இருதரப்பினர் இடையிலும் மோதல் தவிர்க்க முடியாதது ஆனது. 2005ல் ராஜபக்ஸ  ஜனாதிபதி ஆனபின், நோர்வே அமைதி முயற்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புலிகள் ராணுவப்பிரிவில் இருந்த கருணா அம்மான், 2004 மார்ச்சில் பிரபாகரனிடமிருந்து விலகியது, அந்த அமைப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது.

 2009 புலிகளுக்கு சோகமானதாகவே இருந்தது. ஜனவரி 2ல், கிளிநொச்சியை ராணுவம் கைப் பற்றியது புலிகளுக்கு பெரிய அடியானது. 

ஜனவரி 25ல் முல்லைத்தீவை கைப்பற்றியது. வன்னியில் புதுக்குடியிருப்பு பகுதிக்குள் புலிகளின் எல்லையை ராணுவம் நெருக்கியது. 

 ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள், இரு தரப்பு சண்டையில் சிக்கினர். பின் முள்ளிவாய்க்கால் தீபகற்ப பகுதியில் வேறு இடங்களுக்கு தப்ப முடியாத படி ராணுவம் நெருக்கியது.

 இப்பகுதியில், பொதுமக்கள் மீதும் புலிகள் மீதும் ராணுவம் தாக்கியதில் நூற்றுக் கணக் கான புலிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். புலிகள் இருக்கும் இடத் துக்கு சில மீட்டர் தூரம் வரை சென்ற ராணுவம், தாக்குதல் நடத்தியதில் பிரபாகரன் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், பிரபாகரன் மகன் சாள்ஸ் அண்டனி மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பலியாகிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. 

 பிரபாகரன்  மீது பரவலாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அவர்கள் போர்விதிகளை மீறி மக்கள் இருக்கும் இடஙக்ளில் தாக்குதல் நடத்தினர் என்று. இதனால் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 ஆனால், பிரபாகரன் பொதுமக்களை கொல்லவோ அல்லது அவர்களை வைத்து தாக்குதல் நடத்தவோ உத்தரவிட்டதாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அவர்மீதான அந்த குற்றசாட்டு களங்கமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.

 உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள்,

 இன்றைக்கும் தமிழ்நாட்டின் சில ஊர்களில் ஊர் எல்லை தெய்வமான கறுப்பு சாமிக்கு அருகில் இராணுவ உடை அணிந்த ஒரு சிலை நின்று கொண்டிருக்கும். 

அது பிரபாகரன் அவர்களின் சிலைதான். அவர் எந்த மக்களுக்காக பூரண விடுதலை மற்றும் உரிமை கேட்டு போராடினாரோ அந்த மக்களுக்கான விடுதலை இன்னும் கிடைத்த பாடில்லை. 

ஆனால், யாரோ ஒரு சிலருக்கு இன்னும் பிரபாகரன் சாமியாகவும், போராளியாகவும், தலைவனாகவும், தீவிரவாதியாகவும், குற்றவாளியாகவும் அவரவர் பார்வையின் அடிப்படையில் ஏதோ ஒன்றாக நினைவில் இருந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதும் மிகையாகாது.