மன்னாரின் புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்!
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கடந்த 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட நிலையில் இன்று (23.12) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டிருந்தார்.
இன்றைய தினம் காலை ஆலயங்களுக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து புதிய அரச அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வின்போது மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் ,மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள் ,மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதிய அரசாங்க அதிபர் “மன்னார் மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் உள்ள காணி விடுவிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, சுற்றுசூழல் பிரச்சினை,கழிவகற்றல், வனஜீவரசிகள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தின் கீழ் காணப்படும் காணிகளை விடுவிக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட உள்ளதாகவும் அதேநேரம் மாவட்ட அபிவிருத்தி விடயங்களை துரிதப்படுத்தி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும்” உறுதியளித்துள்ளார்.