இலங்கையின் வாசனைத் திரவியங்கள் சீனாவிற்கு!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன விசேட வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
சீன மசாலா இறக்குமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 42 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனை திரவியங்கள் தொடர்பில் 50 பேர் அடங்கிய குழுவினர் நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி, மசாலா மற்றும் அது தொடர்பான பொருட்கள் சபையின் தலைவி குமுதினி குணசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த சீன நிறுவனங்கள் இரண்டு வருடங்களாக ஸ்பைசஸ் அண்ட் அலிட் புராடக்ட்ஸ் போர்டு தயாரிக்கும் மசாலாப் பொருட்களை வாங்குகின்றன.
இந்த செயற்பாடுகள் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டில் மசாலா உற்பத்தி செயற்பாடுகளை பார்வையிடுவதற்காகவே இக்குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், நாட்டின் வாசனை திரவியங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த குழுவினர், இலங்கையின் மசாலாப் பொருட்களை உலகின் மிக உயர்ந்த மசாலாப் பொருட்களாக குறிப்பிட முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் மசாலாப் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அதற்கான அனைத்து ஆதரவையும் வழங்க தங்கள் நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.