பக்கச்சார்பாகவோ அரசியல் கட்சி சார்பாகவோ செயற்படமாட்டேன் உன உறுதியளித்துள்ள புதிய அரச அதிபர்
எந்த அரசியல் கட்சிக்கு சார்பாகவும் நடக்க மாட்டேன், பக்கச்சார்பாகவும் செயற்படமாட்டேன் என புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிகாந்த் மற்றும் பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து தனது அலுவலகத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது மத வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
பதவியினை பொறுப்பேற்றதை தொடர்ந்து மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது.