களனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டுள்ள பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!
களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (18.12) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சம்பவத்தினால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக களனி பல்கலைக்கழகம் கடந்த 5ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.
எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன், ஏனைய இரண்டு பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், சமன் ராஜபக்ஷ. “சமீபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தின் சில மாணவர்களுக்கும் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் பீடங்கள் மூடப்பட்டன.
பல்கலைக்கழகம் மூடப்பட்டதன் பின்னர் மோதல்கள் குறித்து ஆராய மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டன. அதன்படி தீர்மானிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் பல கட்டங்களில் திறக்கப்படவுள்ளது.இன்று சமூக விஞ்ஞான பீடத்திலும் மனிதநேயம் மற்றும் கல்விசார் செயற்பாடுகள் ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.