திருப்பு முனைக்கு காத்திருக்கும் தென்னிலங்கை அரசியல் - வெளியாகவுள்ளது மஹிந்தவின் முக்கிய முடிவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நாட்டுக்கும் கட்சிக்கும் முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளினால் பாரிய விளைவுகளை எதிர்கொண்டோம். அரசியலமைப்பின் ஊடாக இதற்கு தீர்வு கண்டுள்ளோம்.
கட்டாபய ராஜபக்ஷ இல்லை என்பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல, பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

ராஜபக்ஷர்களின் மீளெழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவரது தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை கோருகிறார்கள்.
நளைய தேசிய மாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார். அரகலய என்று குறிப்பிட்டுக் கொண்டு தோற்றம் பெற்ற போராட்டத்தை அடக்குவதில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.
அதனால் தான் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போராட்டத்தை சிறந்த முறையில் அடக்கினார்.
நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும்.
ஜனாதிபதியின் வரி விதிப்பு கொள்கைக்கு துணை போக கூடாது என்பதற்காக வற் வரி மீதான வாக்கெடுப்பில் நான் கலந்துக் கொள்ளவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.