கலைக்கப்படுகின்றதா இலங்கை கிரிக்கெட் சபை! பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
பாராளுமன்றத்தில் கூறும் கருத்துக்களை ஐ.சி.சி. ஏற்றுக் கொள்ளாது. அதனால் பாராளுமன்றத்தில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த 225எம்.பி.க்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கிரிக்கெட் சபையை உடனடியாக கலைக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
ஐ.சி.சி. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்துள்ளது. இதனை விலக்கிக் கொள்ள நாம் அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த நிலையில், பிரபலமாவதற்காக கிரிக்கெட்டில் ஊழல் உள்ளதாக கூச்சலிட்டுக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை.
இங்கு பாராளுமன்றத்தில் கூறும் கருத்துக்களை ஐ.சி.சி. ஏற்றும் கொள்ளாது. இதனை புரிந்து கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இங்கே இருப்பதை நினைத்து நான் கவலையடைகிறேன். நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர்தான் இல்லாது போயுள்ளது. கிரிக்கெட் சபையில் பல பிரச்சினைகள் உள்ளன.
நான் கடந்த காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோதும் கூட, இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைக்க 3,4 தடவைகள் முயற்சித்தேன். ஆனால், ஐ.சி.சி. இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டது.
இந்த நிலையில், நாம் சித்திர ஸ்ரீ அறிக்கைக்கு இணங்க விளையாட்டுச் சட்டத்தை முதலில் மாற்றியமைக்க வேண்டும் எனவே பாராளுமன்றத்தில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என்றார்.