கிளிநொச்சி மைதானம் தேசிய அநீதி! பாராளுமன்றத்தில் பாய்ந்த அமைச்சர்
கிளிநொச்சி விளையாட்டு மைதானம் 400 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டது.
எனினும் அதன் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது அது தேசிய அநீதி என்றே குறிப்பிட வேண்டுமென சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதே போன்று விளையாட்டு மைதானம் அமைக்கப்படாமலே பார்வையாளர் அரங்க மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.எனவே இது தொடர்பில் விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற வாய்மூல விடை க்கான வினா நேரத்தில் எதிர்க்கட்சி எம்.பியான கிங்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விகுப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
விளையாட்டு மைதானங்களின் பராமரிப்புக்களில் உள்ள பிரச்சினைகள் , விளையாட்டு உபகரணங்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் கிங்ஸ் நெல்சன் எம்.பி. கேள்விகளை எழுப்பினார்.
இக்கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
நாடளாவிய ரீதியில் பெருமளவு விளையாட்டு மைதானங்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பராமரிப்பது தொடர்பில் பிரச்சனைகள் காணப்படுகின்றன.

அதனால் தனியார் துறையினருடன் இணைந்து அது தொடர்பான வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களில் பராமரிப்பு தொடர்பில் தற்போது நாம் டயலொக் மற்றும் டெலிகொம் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றோம்.
அவ்வாறு இடம்பெறும் போது மாகாண மட்டத்தில் உள்ள சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குறிப்பாக நீச்சல் தடாகங்கள் போன்றவற்றை பராமரிப்பது பெரும் கஷ்டமான விடயம். அது தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சுக்கு உரிய அனுபவம் இல்லை. புல் வெட்டுபவரில் இருந்து பெரும்பாலான பதவிகள் அரசியல் ரீதியாக வழங்கப்பட்டுள்ளமையே அதற்கு காரணம்.
இதனால் முழு கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஒரு மாத காலத்திற்குள் அது தொடர்பான தீர்மானங்கள் முன் வைக்கப்படும் என்றார்.