மின்வெட்டு காரணமாக வைத்தியசாலைகளில் ஸ்கான் இயந்திரங்கள் செயலிழப்பு!
அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள 03 எம்ஆர்ஐ ஸ்கான் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக மருத்துவ நிபுணத்துவ கூட்டு செயலணி தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் கிடைக்காமையால் இந்த இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "சுகாதார அமைப்பில் ஏற்படும் மின்தடையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி நாம் பேசினால், இது இயந்திரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நீண்ட காலமாக மின்தடையால், நவீன இயந்திரங்களுக்கு மின்சாரம் வழங்க முடியவில்லை. குளிர்ச்சியை இயக்க முடியவில்லை.
இந்நிலையில் தேசிய மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கான் செய்யும் 4 இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் 3 இயந்திரங்கள் தற்போது பழுதடைந்துள்ளன. குளிரூட்டும் அமைப்பை இயக்க முடியாததால் இந்த இயந்திரங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.