பாராளுமன்ற அமர்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டாம்: நாமல் கோரிக்கை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பாராளுமன்ற அமர்வுகளை நேரலைக்கு பதிலாக தாமதமாக ஒளிபரப்புமாறு கோரியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய எம்.பி. ராஜபக்ச, நேரடி ஒளிபரப்பை இடைநிறுத்தி அரை மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பை வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறினார்.
“பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சேறு பூசும் அறிக்கைகளை வெளியிடுவதற்கும் முக்கியமற்ற விஷயங்களைப் பேசுவதற்கும் தங்கள் நேரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவிக்க பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்க நேரிடுகிறது,'' என்றார்.
அண்மையில் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பெரும்பாலும் கிரிக்கெட் பற்றியே பேசியதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் போது பாராளுமன்றம் என்ன முன்னேற்றம் கண்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதன்காரணமாக, பாராளுமன்ற அமர்வுகளை தாமதமாக ஒளிபரப்புமாறு கோரியுள்ளதாகத் தெரிவித்த அவர், பாராளுமன்ற அமர்வுகளை நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.