தனியார் பேருந்துகளில் உடனடியாக நடைமுறையாகவுள்ள திட்டம்!
தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பல்வேறு அநாகரீகமான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தனியார் பேருந்துகளில், பயணிக்கும் பயணிகள் தமது முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் 'வோக்கி டோக்கி' அலைபேசி முறைமையை சகல பேருந்துகளிலும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பயணிகளின் வசதிக்காக அடுத்துவரும் இரண்டு வாரங்களில் இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அனைத்து தனியார் பேருந்துகளிலும் ஜி பி எஸ் முறைமை பொருத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக உணரும் பயணிகள் பேருந்துக்குள் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் தங்களது முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துன்புறுத்தல்கள், திருட்டுகள், பேருந்தின் வேகம், கவனக் குறைவாக வாகனத்தை செலுத்தல், நடத்துனர்களினதும் சாரதிகளினதும் தவறான நடத்தைகள் மற்றும் பேருந்துகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களைக் குறைக்க இந்த திட்டம் உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகளுக்கு சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வசதியுடன் கூடிய பயண அனுபவத்தை கொடுக்கும் நோக்கில் இந்த முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.