ராஜபக்ஷர்கள் மீது தாக்கல் செய்யப்படவுள்ள மற்றுமொரு வழக்கு!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் பொறுப்பு என உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அகில இலங்கை நுகர்வோர் சங்கம் எதிர்காலத்தில் நஷ்டஈடு தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்யவுள்ளது.
அப்போதைய நிர்வாகமும் அதிகாரிகளும் எடுத்த தவறான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதன்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இலங்கை நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் மிலிந்த பிரேமரத்ன கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த வழக்குகளை சிவில் வணிக நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒதுக்கலாம் என சட்ட ஆலோசனை கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விபத்தினால் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மனித மரணங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் இன்றும் அரசாங்கம் அதற்கு நீதி வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் எரிவாயு வெடிப்பு உட்பட பல்வேறு துறைகளில் பல பொருளாதார குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் எத்தகைய பலனையும் தரவில்லை எனவும் மிலிந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்தார்.