கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் மோசடி தொடர்பில் தடயவியல் அறிக்கை வேண்டும் : சஜித்!
நாடு வங்குரோத்தாகுவதற்கும் கிரிக்கெட்டின் அழிவுக்கும் ஊழல்தான் காரணம் எனவும், அதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வு அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (04.12) இடம்பெற்ற மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டவன் என்ற வகையிலும். கிரிக்கெட் ரசிகராகவும் 220 இலட்சம் பேரும் கிரிக்கெட் விளையாட்டை விரும்புகின்றனர். நாட்டு மக்களால் விரும்பப்படும் விடயம் என்பதனால் இது தொடர்பில் பேசுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.
கிரிக்கெட் தொடர்பில் குசலா சரோஜனி அறிக்கை சித்ரசிறி அறிக்கை கணக்காய்வு அறிக்கைகள் உட்பட 3 அறிக்கைகள் இருந்தாலும், அவற்றுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளில் கிரிக்கெட்டில் நிலவும் குறைபாடுகள் ஊழல். மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விடயங்கள் உள்ளன. இது குறித்து பேச உரிமை இருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களிடம் ஊழலைப் பற்றி பேசுவது தவறு. நாடு வங்குரோத்தாகுவதற்கும் கிரிக்கெட்டின் அழிவுக்கும் ஊழல்தான் காரணம். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தீர்மானங்களுக்கு இணக்கப்பாடு அளித்தனர்.
ஆனால் இதற்கு உதவிய அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. கிரிக்கெட் திருடர்கள் இப்போது நன்றாக ஆடிவருகின்றனர். கிரிக்கெட் நிறுவனத்திற்கு பணம் கிடைப்பது வீரர்கள் மற்றும் ரசிகர்களாலேயாகும். என்றாலும் தம்மால் தான் பணம் கிடைப்பதாக கிரிக்கெட் நிர்வாகம் நினைத்துக்கொண்டிருக்கிறது.
இது யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ராஜபக்ஷ் குடும்பம் நாட்டை எழுதிக் கொடுத்தது போன்று நினைப்பதை ஒத்த கதை. எனவே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு தடயவியல் கணக்காய்வு அறிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கிறேன். மிஸ்டர் க்ளீன் என்று அழைக்கப்படும் ஜனாதிபதியால் இதை மேற்கொள்ள முடியும்.
இதனை மேற்கொண்டு அரசியல் மயமாக்கல் முற்றாக நீக்கப்பட வேண்டும். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு முறைப்பாடு செய்ததன் விளைவாகவே கிரிக்கெட் தடை செய்யப்பட்டது இந்நாட்டு குடிமக்கள் சர்வதேச சமூகத்திற்கு கடிதம் எழுதி நாட்டில் கிரிக்கெட்டை தடை செய்ய உரிமையில்லை. இது தொடர்பாக தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.