இந்தியாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கென்யா ஜனாதிபதி

தென் ஆப்பிரிக்காவின் இந்திய பெருங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள நாடு, கென்யா. இதன் தலைநகரம் நைரோபி. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், கென்யா அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ (William Samoei Ruto) இந்தியாவிற்கு டிசம்பர் 4லிருந்து 6 வரை 3-நாள் அரசியல் சுற்று பயணமாக வருகை தர உள்ளார்.
அதிபருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் உடன் வருகை தர உள்ளது. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அதிபர் வில்லியம் மேற்கொள்ளும் முதல் இந்திய சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 5 அன்று அதிபர் வில்லியமிற்கு ராஷ்டிரபதி பவனில் அரசுமுறை உபசரிப்பும், விருந்தும் வழங்கப்பட உள்ளது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், வில்லியம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
முன்னதாக தனது வருகை குறித்து கென்ய அதிபர் வில்லியம், "இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் இடையே சிறப்பான இருதரப்பு உறவு நிலவி வருகிறது. ஜி20 கூட்டமைப்பில் 55 உறுப்பினர் நாடுகளை கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



