வவுனியாவில் கணவன் மனைவி வெட்டிப் படுகொலை!
வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் கணவனும் மனைவியும் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவந்தனர்.
இந்தநிலையில் நேற்றையதினம் இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.
இன்று காலை வியாபார நிலையத்தை திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்தவெள்ளத்தில் கிடந்தமையை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் வயது 72 என்ற முதியவரும், அவரது மனைவியான கனகலட்சுமி வயது 68 என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 5 பவுண் தங்கநகை ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், நகை கொள்ளையிடப்பட்ட போது கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்திலும் செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.