முல்லைத்தீவில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பதற்கு தடையுத்தரவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முல்லைத்தீவில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பதற்கு தடையுத்தரவு!

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட வழக்கு இலக்கத்தின்  AR/1400/23 கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீதான கட்டளை ஏற்றுக்கொள்ளப்பட்டு  மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான தடையுத்தரவு இன்று (25.11)   வழங்கப்பட்டுள்ளது.  

குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த  ஆறு பேர் அடங்கிய குழுவினருக்கே மேற்படி தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் முன்னிலையாகி விடுதலைப்புலிகள் அமைப்பினை நிறுவிய வேலுப்பிள்ளை பிரபாகரனால் விடுதலை போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த அவ் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூறுவதற்காக 1989ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 27ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு அக் காலப்பகுதியில் நினைவு கூரும் நிகழ்வு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,   விடுதலை புலிகளின் இலட்சினையுடன் இந்த நினைவேந்தல் இடம்பெற வேண்டும் என எழுத்து மூலம் கட்டளையிடப்பட்டிருப்பதாகவும்,  இந்த விடயம்   புலனாய்வு பிரிவினால் உறுதிப்படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

எனவே மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏராளமானவர்களை ஒன்றிணைத்து அனுமதி பெறாத ஊர்வலம், பேரணி,  கூட்டங்கள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  தமக்கு தெரிய வந்ததுள்ளதாகவும் அவர் மன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் யுத்த நிலை மறந்து அமைதியாக வாழும் பொது மக்கள் மத்தியில் மீளவும் யுத்த போக்கினை உருவாக்கும் எனவும்,  இனங்களுக்குக்கிடையே அமைதி குலைவு ஏற்படும் எனவும்  கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மன்றில் முன்னிலையான எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான அரச சட்டதரணி, 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை பிரிவு 106 இன் பிரகாரமும் மேலும் வலுவில் உள்ள சட்டங்களின் பிரகாரமும், முதலாம் எதிர் மனுதாரரான பொலிஸ்மா அதிபரும் 04 ஆம் எதிர் மனுதாரரான பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரும் (TID) சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை  மேற் கொள்வதாக தெரிவித்து  கீழ் பெயர் குறிப்பிடப்படுபவர்களுக்கு தடை கட்டளையினை வழங்குமாறும் கோரியிருந்தார். 

இதற்கமைய, நீதிமன்றம் பின்வரும் கட்டளையை பிறப்பித்திருக்கின்றது.  இதன்படி குறித்த 06 பேரும்  2023.11.24ஆம் திகதி இரவு 09.00 மணி தொடக்கம் 2023.11.27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு மாவீரர் நினைவேந்தல் எனும் பெயரில் நினைவேந்தலை நடாத்துவதற்கும், விடுதலை புலிகளின் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதனால் அதன் உறுப்பினர்களாக இருந்து உயிர் இழந்தவர்களை விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நினைவு கூருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  விடுதலை புலிகள் அமைப்பின் தடை செய்யப்பட்ட குறிக்கோள்களுக்கு ஆதரவு அளிக்கும் அல்லது வலு சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள் செய்வதற்கோ கூட்டங்கள் நடாத்துவதற்கோ, அல்லது உரையாற்றுவதற்கோ, ஊர்வலங்கள் பேரணிகள் நடாத்துவதற்கோ மற்றும் பொது அமைதிக்கும், பொது மக்களின் பொது போக்குவரத்திற்க்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106(1)3) ஆம் பிரிவின் கீழ் கட்டளையாக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி   01. முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் அவருடனான குழுவினர்.  

02. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணை செயற்பாட்டாளர் முத்துக்குமார் வசந்தம் புதுமாத்தளன் முல்லைத்தீவு அவருடனான குழுவினர். 

03. முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கந்தையா உதயகுமார் மற்றும் அவருடனான குழுவினர்.

04. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவருடனான குழுவினர்.

 05. சமுதாய செயற்பாட்டாளார் பீட்டர் இளஞ்செழியன் மணல் குடியிருப்பு முல்லைத்தீவு மற்றும் அவருடனான குழுக்கள்.

  06 முல்லைத்தீவு தமிழ் சங்க தலைவர் கந்தசாமி கௌரிராசா மற்றும் அவருடனான குழுக்கள்  ஆகியோருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எனினும் உயிர் இழந்தவர்களை விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற ரீதியில் அல்லாது ஆன்மாக்கள் என்ற ரீதியில் மாத்திரம் சட்டத்தினை மீறாத வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பொது அமைதிக்கும். பொது போக்குவரத்திற்கும் பாதிப்பு இல்லாமல் இக்காலப்பகுதியில் நினைவு கூருவதை இக் கட்டளை தடை செய்யாது என்றும்,  விளம்பி கட்டளையாக்கப்படுகின்றது எனவும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!