யாழ் மாவீரர் துயிலும் இல்லத்தில் விஷமிகளின் அத்து மீறல்!
கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாமிற்கு முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் இனம்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரி பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளரான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8 மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு கொடிகளை கட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனம்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இருப்பினும் அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை எனவும் எனவே இது தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் எனவும் முன்னாள் உப தவிசாளர் மயூரன் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.