இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது : பந்துல குணவர்த்தன!
கடன் மறுசீரமைப்பும் தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது. இதுதான் உண்மை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21.11) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வேளையின்போது பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 100,000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கீழ்13,160 வீதிகளின் (10848 கிலோ மீற்றர்) அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கருத்திட்டத்தின் கீழ் இதுவரை 5201 வீதிகளின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் 7959 வீதிகளின் பணிகளிள் அபிவிருத்தி பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒப்பந்தகாரர்களுக்கு இதுவரை 168.3 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. 5 பில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் உள்ளதால் வெளிநாட்டு முதலீட்டுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கைக்கு இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி முக்கிய பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளது.
பொருளாதார மீட்சிக்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் வெற்றிப்பெற்றால் தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 48 மாத கால கடன் ஒத்துழைப்பை வழங்குவதை உறுதிப்படுத்த முடியும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை துரதிஸ்டவசமாக தோல்வியடைந்து கடன் மறுசீரமைப்பும் தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது. இதுதான் உண்மை. ஆகவே நாட்டு மக்களுக்கு அரசியல் தரப்பினர் உண்மையை குறிப்பிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.