நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!
கொஸ்கொட மற்றும் தொம்பே பிரதேசத்தில் நேற்று (19.11) இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தொம்பே, தெமலகம, கட்டுலந்த வீதியில் தெமலகமவில் இருந்து கட்டுலந்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியின் இடதுபுறமாக பயணித்த பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி அதே முச்சக்கரவண்டியில் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். தெமலகம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் விபத்துக்குள்ளான சாரதி முச்சக்கர வண்டியுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொம்பே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கொஸ்கொட காலி பகுதியில் மோட்டார் சைக்களில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிளில் பயணித்த ஒருவர் பெந்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதியும், பின்பக்க சாரதியும் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார்.
டயகம கல்பட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.