கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பிலான விசாரணை இன்று!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தமை தொடர்பான மனு இன்று (20.11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா, கடந்த 16ஆம் திகதி மனுவை விசாரணைக்கு அழைத்தபோது மனு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான மேலதிக நடவடிக்கையை தடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் விதித்த தடை உத்தரவை இன்று (20.11) வரை நீடிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு விசாரணையில் இருந்து மூன்று நீதிபதிகள் விலகியதன் காரணமாக கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.