இலங்கையின் பல இடங்களில் மழைவீழ்ச்சி பதிவு : வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுப்பு!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (20.11) 75 மி.மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஹா ஓயா வடிநிலத்தின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டுரு ஓயா, தப்போவ, வெஹரலாகல, லுணுகம்வெஹர, மாவர மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
பகவந்தலாவ மஹாஎலிய காப்புக்காடு மற்றும் பகவந்தலாவ ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கெசல்கமுஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பகவந்த்லாவ பிரதேசத்தில் பல தாழ்வான நிலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.