யாழில் மார்கழி இசை விழாவும், உற்பத்தி கண்காட்சியும்!
மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திக் கண்காட்சியும் டிசம்பர் மாதம் 27, 28, 29 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண வணிகக் கழகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உப தலைவர் இ.ஜெயசேகரன் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் மக்களுடைய கலாச்சார கலை பண்பாடுகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்தி கண்காட்சியும் வரும் டிசம்பர் மாதம் 27, 28, 29 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தின் உட்புற மண்டபத்தில் இசைவிழா உற்பத்தியாளர்களது உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை ஏற்றுமதி அதிகார சபை மற்றும் ஏற்றுமதி துறை சார்ந்த பல அனுபவம் வாய்ந்த ஏற்றுமதியாளர்கள் எல்லோரும் இருக்கின்றோம். ஒரு முக்கிய விடயமாக இந்தியாவில் இருந்து சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திகளுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்களைக் காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வானது மார்கழி மாத இறுதியில் இடம் பெறவுள்ளதன் காரணமாக மார்கழி இசை விழா மற்றும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கான கண்காட்சி மற்றும் ஏற்றுமதிக்கான சந்தைவாய்ப்பு அதனுடன் கூடிய உற்பத்தியாளர்களுக்கு தேவையான இயந்திர கண்காட்சிகள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.
குறித்த நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கு பற்றி பயன்பெற முடியும். இந்த நிகழ்வுகளில் யாழ் மாவட்டத்தினர் மாத்திரமல்லாது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பங்குபற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.