மதஸ்தலங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு புதிய திட்டம்!
மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய முடியும் என புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட உதவித் திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டு தலங்களில் சூரிய சக்தி அமைப்புகளை நிறுவும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கதிர்காமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.