வரவு செலவு திட்டம் தொடர்பில் வாகன இறக்குமதியாளர் சங்கம் அதிருப்தி!
வரவு - செலவுத் திட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் டொலர் கையிருப்பு ஓரளவு அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளுமாறு மத்தியவங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சிடம் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்த போதிலும் தமக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்கள் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 400,000 இற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்திற்குப் பின்னர் அல்லது கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.