அரசியல்வாதிகளின் பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் : நாமல் ராஜபக்ஷ!
கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளின் பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வீரர்கள் அசௌகரியங்களுக்கும் பாரபட்சங்களுக்கும் ஆளாக நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நிர்வாக பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக கூறிய அவர், விளையாட்டு மற்றும் வீரர்களின் எதிர்காலத்தை நினைத்து தான் அவ்வாறு செய்ததாக கூறினார்.
அரசியலுக்கும் கிரிக்கட் நிர்வாகத்துக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக சர்வதேச கிரிக்கட் பேரவை கிரிக்கெட்டுக்கு தடை விதித்துள்ளதாகவும், விளையாட்டுத் தடை காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் வருடாந்தம் சுமார் 100 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் உள்ளக நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்க்க விளையாட்டைப் பயன்படுத்தக் கூடாது என்றும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக விளையாட்டைப் பயன்படுத்தக் கூடாது என்றும் பிரச்சினைகள் இருப்பின் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் இலங்கையின் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ரக்பி மற்றும் கால்பந்தாட்ட நிர்வாகத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக அந்த விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டதாக கூறிய அவர், அரசியலுக்கும் விளையாட்டு நிர்வாகத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், கடந்த காலங்களில் நடந்த உண்மைகளின் அடிப்படையில் அதனைப் புரிந்துகொள்வது கடினமல்ல என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.