நட்சத்திர விடுதியில் கொலைக் குற்றவாளியின் மகளுக்கு விழா: சிறைச்சாலைக்கு நேரடி ஒளிபரப்பு
இலங்கையில் அதிவிசேட பிரமுகர் ஒருவரை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூஸ்ஸ சிறையில் அதிபாதுகாப்பு அறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் குழுவின் உறுப்பினர் ஒருவரின் மகளுக்கு, கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் மிகவும் பிரமாண்டமான முறையில் பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது .
பெருந்தொகை செலவழித்து பிரமாண்டமான முறையில் அந்த உற்சவம் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உற்சவமும் விழா கடந்த 23ஆம் திகதி இரவு நடத்தப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

மிகவும் விலையுயர்ந்த அழைப்பிதழ் அட்டை மிகவும் அழகாக அச்சிடப்பட்டுள்ளது. விழாவிற்காக 150-200க்கும் உட்பட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.
விழா நிறைவடைந்தததும் கொழும்பு, கொம்பனி வீதியில் ஹோட்டலுடன் இருக்கும் முன்னணி வீட்டுத்தொகுதியின் அறையொன்றில் மற்றுமொரு பிரிவினருக்கு அன்றிரவு மீண்டும் விருந்து வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
சிறையிலுள்ள குற்றவாளியான தந்தை , விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் கையடக்கத் தொலைபேசி மூலம் நேரடியாகப் பார்த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.