சட்டவிரோதமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை கொண்டுவர முயன்ற இருவர் கைது!
பூச்சிக்கொல்லி மருந்துகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயன்ற இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்பிட்டி, காரைதீவு மற்றும் பாலியாவத்தை கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகு ஒன்றை அவதானித்து பரிசோதித்த போது, பதினைந்து பைகளில் அடைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், பள்ளியாவத்தை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் போது, கடத்தல்காரர்களால் கரைக்கு கொண்டு வர முடியாமல் விட்டுச் சென்ற மற்றுமொரு பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 43 மற்றும் 46 வயதுடைய கல்பிட்டியை சேர்ந்த இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.